மேற்கு மண்டலம்
அக்டோபர் : 06 மஸிகாபாத் பணித்தளத்தில் ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு முகாமில், பணித்தள மக்கள் 30 பேர் கலந்துகொண்டனர். கல்வியின் முக்கியத்துவைத்தைக் குறித்தும் மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கான கல்வியின் அவசியத்தைக் குறித்தும் சகோதரி மகதலேனா எடுத்துரைத்தார்.
அக்டோபர் : 07 மேற்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களில் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றோர், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள அன்பை சபைக்கு வெளிப்படுத்தினர். இவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், சொந்த ஜனங்களுக்கு முன் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 08 Peace 2 கோட்டத்தின் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில், பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 300 விசுவாசிகள் குடும்பமாகப் கலந்துகொண்டனர். சென்னையைச் சேர்ந்த சகோதரர் ஜான் சாமுவேல் இக்கூடுகையில் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. தொடர்ந்து, செப்டம்பர் 14 அன்று எபேசியர் மற்றும் கலாத்தியர் புத்தகங்களிலிருந்து இக்கோட்டத்தில் நடைபெற்ற வேத வினாப் போட்டிகளில் 700 பேர் பங்கேற்றனர்; இது விசுவாசிகள் வேதவாசிப்பில் தொடர்ந்து ஊக்கமடைய வகைசெய்தது.
அக்டோபர் : 09 சசராம் பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல் மையக் கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவுற்று, அடுத்த கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், திட்டமிடப்பட்டுள்ள நாட்களில் செயல் மையம் கட்டிமுடிக்கப்படவும் ஜெபிப்போம்.
அக்டோபர் : 10 பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்படவும், மேலும், பர்ஹரி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்காக ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்படவும், இப்பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டிமுடிக்கப்பட்டு ஜனங்கள் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.