August 2025

 மேற்கு மண்டலம்

ஆகஸ்ட் 06  பாபுவா பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் 300 விசுவாசிகள் கலந்துகொண்டனர். சகோ. வின்சென்ட் ஜெயராஜ் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். பாதங்கழுவுதலுடனும் மற்றும் கர்த்தருடைய பந்தியுடனும் இக் கூடுகை நிறைவுபெற்றது. விசுவாசிகளின் பரிசுத்த வாழ்க்கைக்காகவும் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 07 போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2  ஆகிய கோட்டங்களில் நடைபெற்ற வேத வினா போட்டிகளில் 700 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  விசுவாசிகள் வேதத்தை கற்பதில் ஆர்வம் காட்டவும் விசுவாசத்தின் நிலைத்து நிற்கவும் தங்கள் குடும்பத்தினருக்குச் சாட்சியாக வாழவும், சமுதாயத்தினர் இவர்கள் மூலமாகக் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 08 பஹ்வான்பூர் ஜெம்ஸ் சமுதாய மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கானச் சிறப்புக்  கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். பஹ்வான்பூர், சந்த், ஹட்டா மற்றும் பிஹாரா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 120 விசுவாசிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். சகோதரி மாலினி வின்சென்ட் பெண்களின் வாழ்க்கைக்கு ஏற்ற ஆலோசனைகளையும் மற்றும் தேவ செய்தியையும் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்காக ஜெபித்தார். வரும் நாட்களில் பணித்தளங்களில் பெண்கள் சந்திக்கப்படவும், பெண்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 09 பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள், எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்டக் காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவும், சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டு வரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும், போஜ்புரி -1 கோட்டத்தில், கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 10 பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், கிராமங்களில் வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணி மற்றும் கைப்பிரதி ஊழியங்களுக்காகவும், வாலிபர் சிறப்புக் கூடுகைகளுக்காகவும் ஜெபிப்போம்.


July 2025

                                                            மேற்கு மண்டலம்



ஜுலை 07 துர்க்காவதி ஜெம்ஸ் செயல்மையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான வாலிபர் கூட்டத்தில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 75 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் ஆராதனையினைத் தொடர்ந்து, சகோ. வெண்ணிலவன் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டார். வாலிபத்தில் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்தும், வருங்காலத்தில் வாழ்க்கையை வடிவமைப்பதைக் குறித்தும் வழிகாட்டப்பட்டது. இக்கூட்டங்களில் பங்கேற்ற வாலிபர்கள் பணித்தளங்களில் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழவும், வாழ்க்கையில் அவரை வெளிப்படுத்தவும் ஜெபிப்போம். 

ஜுலை 08 ஜுன் 14 அன்று ராம்கட் பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 70 பெண்கள் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். சகோதரி மாலினி வின்சென்ட் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இக்கூடுகையில் கலந்துகொண்ட பெண்களுக்காகவும், குடும்பங்களில் அவர்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் தீபங்களாகத் திகழவும் ஜெபிப்போம். 

ஜுலை 09 பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, போஜ்புரி-1 கோட்டத்தின் 17 இடங்களில் 1320 சிறுவரையும், போஜ்புரி-2 கோட்டத்தின் 23 இடங்களில் 1470 சிறுவரையும், தொடர்ந்து, 4 ஜெம்ஸ் காப்பகங்களின் 280 பிள்ளைகளையும் மற்றும் பாபுவா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியின் 700 மாணவர்களையும் சந்தித்து கிறிஸ்துவின் அன்பிற்குள் அவர்களை வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொண்ட பிள்ளைகள், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும் மற்றும் தங்கள் குடும்பத்திற்கு விளக்காக மாறவும் ஜெபிப்போம். 

ஜுலை 10 பணித்தளங்களில், இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். பெலாவன் பணித்தளத்தில் ஜெம்ஸ் சமுதாய மையக் கட்டுமானப் பணியினைத் தொடங்க உதவிசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இப்பணிகள் வரும் நாட்களில் தடையின்றி நடைபெறவும், இப்பணித்தள மற்றும் சுற்றியுள்ள மக்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 11 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும், அங்குள்ள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம். 



June 2025

                                                        மேற்கு மண்டலம்



* பணித்தளங்களில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஏப்ரல் 19 அன்று போஜ்புரி-1 கோட்டத்திலும் மற்றும் ஏப்ரல் 30 அன்று போஜ்புரி-2 கோட்டத்திலும் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 75 பேர் கலந்துகொண்டனர்.

*  போஜ்புரி -2 கோட்டத்தின் சூர்யபுரா பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரப் பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 120 பெண்கள் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோதரி ஜெயந்தி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, போஜ்புரி-1 கோட்டத்தின் பாபுவா பணித்தளத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில் 150 பெண்கள் பங்கேற்றனர்; Dr. லீனா மற்றும் Dr. பிரீனா ஆகியோர் இக்கூடுகையின்போது கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாழ்க்கைக்கடுத்த ஆலோசனைகளையும் வழங்கி, ஜெபத்தில் வழிநடத்தினர். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இக்கூடுகைகள் ஆவிக்குரிய விதத்திலும் மற்றும் வாழ்க்கைக்கேற்ற வழிகாட்டுதல்களிலும் ஆசீர்வாதமாக அமைந்தன. 

*  தியோஹலியா பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் மொகனியா பணித்தளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சபைகளைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர்; சகோ. வின்சென்ட் ஜெயராஜ் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களுக்காக ஜெபித்தார். பாதங்கழுவுதல் மற்றும் கர்த்தருடைய பந்தியுடன் கூட்டம் நிறைவுற்றது. ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், சுத்திகரிப்புக்கும் மற்றும் உன்னத நிலையினை நோக்கிய பயணத்திற்கும் இக்கூடுகை உதவிபுரிந்தது.

*  Rahab மற்றும் Our People Project இல்லப் பிள்ளைகளுக்கு உள்ளாடைகள், காலணிகள் மற்றும் பள்ளிப் பைகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். 

*  போஜ்புரி -1 மற்றும் போஜ்புரி -2 கோட்டங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக உடன் விசுவாசிகளுக்கும் மற்றும் சபைக்கும் வெளிப்படுத்தினர்.

*  சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளுக்காகவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவும், பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியர்களுக்காகவும் மற்றும் உத்திரப்பிரதேசம் ஊழியங்களில் உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.




May 2025


மேற்கு மண்டலம்



ஏப்ரல் 14 முதல் 16 வரையிலான நாட்கள் ராஜ்கிர் பணித்தளத்தில் நடைபெற்ற மண்டல முகாமில் ஜெம்ஸ் சமூக பராமரிப்பு ஊழியர்கள் குடும்பமாகப் பங்கேற்றனர். இம்முகாமில் 

சகோ. வின்சென்ட் ஜெயராஜ், சகோ. பெஞ்சமின் மற்றும் சகோதரி சஜிலா நார்டன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். ஆராதனை, தேவ செய்தி மற்றும் விளையாட்டுகள் என முகாமின் ஒவ்வொரு பகுதியும் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைந்தன. 

•   கோச்சஸ் பணித்தளத்தில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் சகோதரி ஜெயந்தி கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். சுமார் 120 பெண்கள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். 

•     ஏப்ரல்  12  அன்று  சசராம் பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில் 400 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சகோ. பிரவீன் கர்த்தருடையச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் பெலப்பட வழிநடத்தினார். வாலிபத்தின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம், ஜெம்ஸ் வாலிபர் ஊழியர்களின் மூலமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

•      வரும்    நாட்களில்  பணித்தளங்களில்  நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்துகொள்ளவிருக்கும் சிறுவர் சிறுமியர் மற்றும் அவர்களது பெற்றோர்களின் இரட்சிப்பிற்காகவும், சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப்பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்படவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், பர்ஹேரி பணித்தளத்தில் ஆலயம் கட்டுவதற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும் மற்றும் உத்திரப்பிரதேசம் மாநில ஊழியங்களில் உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் ஜெபிப்போம். 


April 2025

 மேற்கு மண்டலம்


• போஜ்புரி கோட்டத்தின் மொகனியா பணித்தளத்தில் மார்ச் 22 அன்று நடத்தப்பட்ட போதகர் கருத்தரங்கில், 40 போதகர்கள் பங்கேற்றனர்.      சகோ. S.D.பொன்ராஜ் இக்கருத்தரங்கில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். கைமூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களைக் குறித்து கலந்துரையாடவும், வரும் நாட்களில் செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காக போதகர்களாக ஒருமனதுடன் இணைந்து ஜெபிக்கவும் இக்கருத்தரங்கு உதவியது.

• பெலாவன் மற்றும் ஹட்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களை கர்த்தர் ஆசீர்வதித்தார். 500 பேர் இக்கூட்டங்களில் பங்கேற்று கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டனர்.

• கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற போஜ்புரி-2 கோட்டத்தின் விசுவாசிகளுக்கான ஒருநாள் கன்வென்ஷன் கூட்டத்தில், பல்வேறு பணித்தள சபைகளைச் சேர்ந்த 1100 விசுவாசிகள் பங்கேற்றனர். சகோ. குணசேகரன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இணைந்து நடைபெற்ற சிறுவர் முகாமில், கூட்டத்தில் பங்கேற்ற விசுவாசிகளின் பிள்ளைகள் 300 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நேராக வழிநடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார்.

• மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தினங்கள், கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற தலைவர்களுக்கான கூடுகையில், ஊழியத்தின் முன்னேற்றம்; மற்றும் விரிவாக்கம் ஆகியவைகளைக் குறித்து ஆலோசிக்கவும், ஜெபத்துடன் திட்டங்களை வகுக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார்.

• சசராம் பணித்தளத்தில், ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப்பணிகளை ஜெபத்துடன் தொடங்க தேவன் கிருபைசெய்தார். இக்கட்டுமானப் பணிகள் எவ்வித தடையுமின்றி, திட்டமிடப்பட்ட நாட்களில் கட்டிமுடிக்கப்பட ஜெபிப்போம்.

• பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப்பணிகளுக்காகவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் ஊழியங்களில் கர்த்தர் திறந்தவாசலைக் கட்டளையிடவும் ஜெபிப்போம். 

March 2025

 மேற்கு மண்டலம்


  • B-1 கோட்டத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் விசுவாசிகளுக்காக தொலைபேசி வாயிலாக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இந்த ஜெபத்தில் எழுத்தறிவற்ற 65 விசுவாசிகள் பங்கேற்று உத்திரப்பிரதேசத்திற்காகவும் மற்றும் இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். அத்துடன், கல்வி அறிவு பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட ஜெபத்திலும் 40 பேர் பங்கேற்றனர். இம்மாநிலத்தில், ஊழியத்திற்கும் மற்றும் கர்த்தரை ஆராதிக்கவும் உண்டாயிருக்கும் தடைகளை கர்த்தர் நீக்கவும், விசுவாசிகள் விடுதலையோடு விரைவில் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 
  • B-2 கோட்டத்தில் நடைபெற்ற ஒருநாள் ஊழியர் உபவாசக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். செய்யப்பட்டுவரும் ஊழியங்களைக் குறித்து ஆலோசிக்கவும், வருங்கால ஊழியங்களுக்காகத் திட்டமிட்டு,  ஆண்டவருடைய நடத்துதலுக்காக அவருடைய பாதத்தில் காத்திருக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். 
  • கர்த்தருடைய பெரிதான கிருபையினால், பிப்ரவரி 15 அன்று, துர்க்காவதி பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல்மையம் திறக்கப்பட்டது. சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் செயல்மையத்தைத் திறந்துவைத்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தையினையும் பகிர்ந்துகொண்டார். பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
  • சசராம் பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கான அரசு அங்கீகாரம் கிடைக்க உதவிசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். விரைவில் இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படவும், விடுதலையோடு ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம். 
  • அரசாங்கப் பொதுத்தேர்வு எழுதிவரும் ஜெம்ஸ் மிஷனரிகள் மற்றும் இல்லங்களின் பிள்ளைகளுக்காகவும், பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.

FEBRUARY 2025

 மேற்கு மண்டலச் செய்திகள்



  • போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-1 ஆகிய கோட்டங்களின் பணித்தளங்களில், சுமார் 4000 பேருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நற்செய்தியின் வாயிலாகவும் மற்றும் கைப்பிரதிகளின் வாயிலாகவும் அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார். 
  • பாபுவா மற்றும் பாரே ஆகிய பணித்தளங்களின் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் வாயிலாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சிகளில், சகோ. மரியோஷ் மற்றும் சகோதரி ரீனா கோபோர்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, தேவ செய்தியையும் பகிர்ந்துக்கொண்டனர். 
  • கடந்த ஆண்டு இறுதிவரை, சுமார் 10000 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க தேவன் பாராட்டிய கிருபைக்காக அவருக்கு நன்றிசெலுத்துகின்றோம். 
  • கர்த்தருடைய பெரிதான கிருபையினால், பெலாவன் பணித்தள ஆலயத்திற்கான நில ஆவணங்களை நிறைவுசெய்ய கர்த்தர் உதவிசெய்தார்.
  • பணித்தளங்களில் கைம்பெண்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் விதவைகள் 500 பேருக்கு இலவசமாக குளிராடைகளையும் மற்றும் உடைகளையும் வழங்கி, கூடவே, கிறிஸ்துவின் அன்பினையும் அறிக்க கர்த்தர் கிருபை செய்தார். 
  • ஜனவரி 18 அன்று நடைபெற்ற விபத்தினால், கால் எலும்பு முறிவுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் ஜெம்ஸ் ஹேப்பி ஹோம் இல்லத்தின் சகோதரர் மண்டு விரைவில் குணமாகவும், சசராம் பணித்தளத்தில் ஆலயக் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டிருக்கும் நாட்களில் தடையின்றி தொடங்கப்படவும், பெலாவன் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.