மே 06 போஜ்புரி -1 கோட்டத்தின் பெலாவன், பாபுவா மற்றும் துர்க்காவதி பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில் 800 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. ராகேஷ், சகோ. வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் சகோ. ரூபன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.
மே 07 பெலாவன் மற்றும் பாபுவா பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் முகாம்களில் 100 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள், வேத வசனங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக, ஜெம்ஸ் சிறுவர் ஊழியக் குழுவினர் சிறுவர்களை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்தினர். கோராரி மற்றும் துர்க்காவதி பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியர் குடும்பக் கூடுகைக்காக ஜெபிப்போம்.
மே 08 போஜ்புரி கோட்டத்தின் கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 340 வாலிபர்களும், தியோஹலியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 75 வாலிபர்களும் பங்கேற்றனர். வாலிபருக்கேற்ற செய்திகள், சாட்சிகள் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கான நடைமுறை ஆலோசனைகளுடன், எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் கூடவே வழங்க கர்த்தர் உதவிசெய்தார். வாலிபர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், பணித்தளங்களில் வாலிபர் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மே 09 போஜ்புரி 1 மற்றும் போஜ்புரி 2 கோட்டங்களில், லூக்கா சுவிசேஷத்திலிருந்தும் மற்றும் 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர் நிருபங்களிலிருந்தும் நடைபெற்ற வேதவினாப் போட்டிகளில் 900 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற ஜெபிப்போம்.
மே 10 துர்க்காவதி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காகவும், அதில் பயிலும் மாணவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடையவும், பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கவும் ஜெபிப்போம்.





