May 2026



மே 06 போஜ்புரி -1 கோட்டத்தின் பெலாவன், பாபுவா மற்றும் துர்க்காவதி பணித்தளங்களில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டங்களில் 800 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. ராகேஷ், சகோ. வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் சகோ. ரூபன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபிப்போம்.  

மே 07 பெலாவன் மற்றும் பாபுவா பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் முகாம்களில் 100 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள், வேத வசனங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக, ஜெம்ஸ் சிறுவர் ஊழியக் குழுவினர் சிறுவர்களை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்தினர். கோராரி மற்றும் துர்க்காவதி பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஊழியர் குடும்பக் கூடுகைக்காக ஜெபிப்போம்.  

மே 08 போஜ்புரி கோட்டத்தின் கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 340 வாலிபர்களும், தியோஹலியா பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 75 வாலிபர்களும் பங்கேற்றனர். வாலிபருக்கேற்ற செய்திகள், சாட்சிகள் மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கான நடைமுறை ஆலோசனைகளுடன், எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களையும் கூடவே வழங்க கர்த்தர் உதவிசெய்தார். வாலிபர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், பணித்தளங்களில் வாலிபர் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 09 போஜ்புரி 1 மற்றும் போஜ்புரி 2 கோட்டங்களில், லூக்கா சுவிசேஷத்திலிருந்தும் மற்றும் 1 மற்றும் 2 தெசலோனிக்கேயர் நிருபங்களிலிருந்தும் நடைபெற்ற வேதவினாப் போட்டிகளில் 900 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற ஜெபிப்போம். 

மே 10 துர்க்காவதி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளுக்காகவும், அதில் பயிலும் மாணவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலனடையவும், பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கவும் ஜெபிப்போம். 


April 2026

 

ஏப்ரல் 6 'பாபுவா, ராம்கட், கோச்சஸ் மற்றும் தியாரா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளில் 620 பேர் பங்கேற்றனர். பெலாவன் பணித்தளத்தில் ஆலயக் கட்டுமானத்துடன், ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளையும் தொடங்க தேவன் கிருபை செய்தார். பணித்தளங்களில் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையில் அவரோடு இணைந்தவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம். 

ஏப்ரல் 7 'பகவான்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், பகவான்பூர், ஹட்டா, சந்த் மற்றும் பிஹரா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்றனர். தனிப்பட்ட வாழ்கையை தேவசமூகத்தில் ஆராய்ந்து பார்க்கவும், பரிசுத்தத்தில் வளரவும் போதிக்கப்பட்டதுடன், கால்களைக் கழுவுதல் மற்றும் கர்த்தரின் பந்தியுடன் இக்கூட்டம் நிறைவடைந்தது. சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டிடப்பணிகள், எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஜெபிப்போம். 

ஏப்ரல் 8 'P-1 கோட்டத்தின் துர்க்காவதி பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற ஒருநாள் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், மொஹனியா, துர்க்காவதி, தேவ்ஹலியா, மசௌடா, புசௌலி மற்றும் சையத்ராஜா பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்; சகோ. வின்சென்ட் ஜெயராஜ் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, கூடிவந்தவர்களுக்காக ஜெபித்தார். மேலும், ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், ராம்நகர், பதௌரா, பக்சடா, ரியோடிபூர் மற்றும் நுவாவுன் பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 200 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. எமர்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 

ஏப்ரல் 9 'துர்க்காவதி மற்றும் ராம்நகர் பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் முகாம்களில், பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் வாயிலாக வேதவசனங்களை அவர்களது இதயத்தில் விதைக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். முகாமில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர் சிற்றுண்டியுடன் பரிசுகளும் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டனர். பணித்தளங்களில் சிறுவர் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், சிறுவயதிலேயே அவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 10 'சக்கியா பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், துர்க்காவதி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெறும் சகோதரர்களுக்காகவும் மற்றும் மேற்கு மண்டலத்தில் செயல்பட்டுவரும் சிறுவர் இல்லங்கள் மற்றும் பிற திட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.

March 2026

 



மார்ச் 6 : பிப்ரவரி 7 அன்று போஜ்புரி – 2 கோட்டத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் 1000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்; சகோ. பால் பேன்ஸ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. இக்கூடுகையின்போது, நடைபெற்ற சிறுவர் முகாமில் 300 சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். ஜெம்ஸ் சிறுவர் துறை ஊழியர்கள் சகோ. பகவான் மற்றும் சகோ உமேஸ் ஆகியோர், பாடல்கள், வேதவசனங்கள் மற்றும் பல்வேறு நிழ்ச்சிகள் மூலமாக சிறுவர்களை கிறிஸ்துவின் அன்பிற்கு நேராக வழிநடத்தினர். விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், பணித்தள வாலிபர் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

மார்ச் 7 : மொகனியா, சக்கியா, ராம்கட், பஹ்வான்பூர் மற்றும் பெலாவன் பணித்தளங்களில் நடைபெற்ற ஊழியர்களுக்கான சிறப்புக் கூடுகைகளில் பணித்தள ஊழியர்கள் கலந்துகொண்டு, பணித்தள ஊழியங்களுக்காக ஜெபித்ததுடன், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் சுவிசேஷப் பணிகளுக்காகவும் திட்டமிட கர்த்தர் உதவிசெய்தார். பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

மார்ச் 8 : சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் மேற்கூரைப் பணிகள் நிறைவடைய கர்த்தர் உதவிசெய்தார்; தொடர்ந்து கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், விரைவில் இங்கு ஆலய ஆராதனை தொடங்கப்படவும் ஜெபிப்போம்.    
 
மார்ச் 9 : துர்காவதி பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் தொடங்கப்பட்டுள்ள சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளில் பத்து சகோதரர்கள் இணைந்து பயிற்சிபெற்றுவருகின்றனர். இவர்கள் தேவ அன்பில் பெலப்படவும், வேதத்தை அறிந்துகொள்ளவும், பயிற்சியினைத் தொடர்ந்து இவர்கள் செய்யவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 10 : துர்க்காவதி மற்றும் ராம்கட் பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், மேற்கு மண்டலத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

Feb 2026

 


பிப்ரவரி 6
 
 போஜ்புரி – 1 கோட்டத்தில், லூக்கா சுவிசேஷத்திலிருந்து நடத்தப்பட்ட வேதாகம வினாடி வினாப் போட்டியில், 300 விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விசுவாசிகள் வேதத்தை அதிகம் தியானிக்கவும் மற்றும் வேத வாசிப்புப் பழக்கத்தை தங்கள் வாழ்க்கையில் அதிகரிக்கவும் இத்தகைய போட்டிகள் ஊக்கமளித்துவருகின்றன. குளிர்நாட்களை முன்னிட்டு, பணித்தளங்களில் தேவையுள்ள மக்களுக்கு இலவச குளிராடைகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். பணித்தள விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும், விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகளை கர்த்தர் நீக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 7 சசராம் பணித்தளத்தின் ஜெம்ஸ் சமுதாய மையக் கட்டிடத்தின் மேற்கூரைப் பணிகள் நிறைவடைய கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் (GEMS Action center) எவ்விதத் தடையுமின்றி நடைபெறவும், விடுதலையோடு விரைவில் ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 8 பெலாவன் பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்துடன் ஊழியர் இல்லத்தினையும் கட்டி முடிக்க கர்த்தர் உதவி செய்தார். இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி நிறைவேறவும், துர்காவதி பணித்தளத்தில் தெபோராள் பயிற்சி மையம் (DTC) விரைவில் தொடங்கப்படவும், வரவிருக்கும் மாதங்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நற்செய்தி அறிவிப்பு ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 9 போஜ்புரி – 1 மற்றும் போஜ்புரி – 2 ஆகிய கோட்டங்களின் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட சுவிசேஷ நிகழ்ச்சிகளின் மூலமாக, அரசு அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சுமார் 700 பேர் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினை பகிர்ந்துகொள்ளவும், அவர்களுடன் நல்லதோர் உறவினை உருவாக்கிக்கொள்ளவும் கர்த்தர் உதவிசெய்தார்.  

Jan 2026

 





ஜனவரி -  07  'போஜ்புரி" 2 கோட்டத்தின் பம்ஹன் பரேட்டா கிராமத்தில் நடைபெற்ற  ஜெம்ஸ் இலவச மருத்துவ முகாம் மூலமாக 420 பேர் பயனடைந்தனர். இம்முகாமில், 16 மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு சிகிச்சையளித்ததுடன் இயேசு கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார். இக்கிராமத்தில் நடைபெற்றுவரும் சுவிசேஷப் பணிகளின் மூலமாக வரும் நாட்களில் அநேக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட ஜெபிப்போம். 

ஜனவரி -  08  'போஜ்புரி" 2 கோட்டத்தில், பிலிப்பியர் மற்றும் கொலோசெயர் நிருபங்களிலிருந்து நடைபெற்ற வேதாகமப் போட்டியில் பணித்தள மக்கள் 700 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவ்வகை வேதாகமப் போட்டிகள் வேத வாசிப்புப் பழக்கத்தினை விசுவாசிகளிடையே ஊக்குவிப்பதுடன், வசனத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையினை ஊன்றக் கட்டுவதற்கும் உறுதுணையாக அமைவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் இவ்வகை வேதாகமப் போட்டிகளுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  09  'சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல் மையத்தின் மேற்கூரைப் பணிகள் முடிவடைய கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து நடைபெற்றுவரும் இச்செயல் மையத்தின் கட்டுமானப்பணிகள் எவ்விதத் தடையுமின்றி நிறைவடையவும் மற்றும் இப்பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாய ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஜனவரி - 10  'வட இந்தியாவை அதிகமாகத் தாக்கிவரும் இக்குளிர் நாட்களில், பணித்தளங்களில் சுமார் 200 குடும்பத்தினருக்கு இலவசமாக கம்பளிகளை வழங்க கர்த்தர் உதவிசெய்தார். விசுவாசிகள் மற்றும் ஊழியர்களை கர்த்தர் இக்குளிர் காலத்தில் பாதுகாக்க ஜெபிப்போம். 

ஜனவரி - 11 'பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப்பணிகள் தடையின்றி நடைபெறவும், விரைவில் பணிகள் நிறைவுற்று ஜனங்கள் தேவனை ஆராதிக்கவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் நற்செய்தி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.  


December 2025

 மேற்கு மண்டலம்



டிசம்பர் 07 துர்க்காவதி ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் ஊழியர் முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பணித்தள ஊழியர்கள் இம்முகாமில் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். சகோ. அன்டன் கோமஸ் மற்றும் சகோ. ஜெயசீலன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, ஊழியர்களை உற்சாகப்படுத்தினர். இவ்விரு கோட்டங்களில் நடைபெறும் ஆத்தும அறுவடைப் பணிகளுக்காகவும் மற்றும் சபை ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 08 மேற்கு மண்டலத்தின்; நடைபெற்ற Giant கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தினங்கள் பர்ஹரி பணித்தளத்திலும், நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தினங்கள் மொகனியா பணித்தளத்திலும் மற்றும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தினங்கள் பரசத்துவா பணித்தளத்திலும் நடைபெற்ற இக்கூடுகைகளில், விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தனர். இத்தகைய ஜெப ஆவி விசுவாசிகளைப் பற்றிப்பிடிக்கவும், ஜெப வீரர்களாக விசுவாசிகள் மாறவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 09 துர்க்காவதி பணித்தளத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற போஜ்புரி-1 ஊழியர் குடும்பக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் தேவ சமூகத்தில் தங்களை ஆராய்ந்து அறியவும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றும் ஜெப வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லவும் இக்கூடுகை வழிவகுத்தது. 

டிசம்பர் 10 சசராம் ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப் பணிகள் முதல் தளம் வரை உயர கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், பணிசெய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். அவ்வாறே, பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் தடையின்றி நிறைவேற்றி முடிக்கப்பட ஜெபிப்போம். 

டிசம்பர்11 போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-2 ஆகிய கோட்டங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டோர், கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் வாயிலாக உறுதிசெய்தனர்; தேவனுக்கே மகிமை! இவர்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், இவர்களது குடும்பத்தினர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.   

November 2025

                                                மேற்கு மண்டலம்



நவம்பர் 6 போஜ்புரி 1 கோட்டத்தில் வேதம் வாசிக்கும் பழக்கத்தை விசுவாசிகள் மத்தியில் ஊக்குவிக்கவும் மற்றும் வேதத்தின் மீதுள்ள ஆர்வத்தினைப் பெருக்கவும் நடைபெற்ற வேதாகம வினாடி வினாப் போட்டியில், பணித்தள விசுவாசிகள் 300 பேர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். விசுவாசிகளின் குடும்பத்திற்காகவும் மற்றும் பிள்ளைகள் கிறிஸ்துவின் சத்தியத்தில் வளர்க்கப்படவும் ஜெபிப்போம் .

நவம்பர் 7 பாபுவா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் விசுவாசிகளுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையில் 265 தம்பதியினர் பங்கேற்றனர்; சகோ. ரூபன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரி ஜெயந்தி ஆகியோர் தேவ செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர், உடன்படிக்கையின் மூலமாக தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் நடைபெறும் சுவிசேஷ ஊழியங்களுக்காகவும் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 8 போஜ்புரி-2 கோட்டத்தின் அனைத்து ஊழியர்களுக்கான மூன்று நாட்கள் உபவாச ஜெபம், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்றது. ஊழியர்கள் குடும்பமாக கலந்துகொண்டு ஜெபத்திலும், சுயபரிசோதனையிலும் தங்கள் நேரத்தைச் செலவிட ஏற்ற தருணமாக அமைந்தது. உத்திரப்பிரதேசத்தில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்துநிற்கவும் ஜெபிப்போம். 

நவம்பர் 9 கோடாரி பணித்தளத்தில் சமுதாய மையக் கட்டிடத்தினைப் புதுப்பிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளத்தில், செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லத்திற்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 10 சசராம் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஜெம்ஸ் செயல்மையக் கட்டிடத்தின் பணிகள் எவ்விதத் தடையுமின்றி குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பெலாவன் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் இடையூறின்றி தொடர்ந்து நடைபெறவும் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.