April 2026

 

ஏப்ரல் 6 'பாபுவா, ராம்கட், கோச்சஸ் மற்றும் தியாரா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகைகளில் 620 பேர் பங்கேற்றனர். பெலாவன் பணித்தளத்தில் ஆலயக் கட்டுமானத்துடன், ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளையும் தொடங்க தேவன் கிருபை செய்தார். பணித்தளங்களில் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உடன்படிக்கையில் அவரோடு இணைந்தவர்கள் தொடர்ந்து தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்க ஜெபிப்போம். 

ஏப்ரல் 7 'பகவான்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், பகவான்பூர், ஹட்டா, சந்த் மற்றும் பிஹரா ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்றனர். தனிப்பட்ட வாழ்கையை தேவசமூகத்தில் ஆராய்ந்து பார்க்கவும், பரிசுத்தத்தில் வளரவும் போதிக்கப்பட்டதுடன், கால்களைக் கழுவுதல் மற்றும் கர்த்தரின் பந்தியுடன் இக்கூட்டம் நிறைவடைந்தது. சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டிடப்பணிகள், எவ்விதத் தடையுமின்றி நடைபெற ஜெபிப்போம். 

ஏப்ரல் 8 'P-1 கோட்டத்தின் துர்க்காவதி பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற ஒருநாள் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், மொஹனியா, துர்க்காவதி, தேவ்ஹலியா, மசௌடா, புசௌலி மற்றும் சையத்ராஜா பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்; சகோ. வின்சென்ட் ஜெயராஜ் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, கூடிவந்தவர்களுக்காக ஜெபித்தார். மேலும், ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற வட்டாரக் கன்வென்ஷன் கூட்டத்தில், ராம்நகர், பதௌரா, பக்சடா, ரியோடிபூர் மற்றும் நுவாவுன் பணித்தளங்களைச் சேர்ந்த சுமார் 200 விசுவாசிகள் பங்கேற்றனர்; இக்கூட்டத்தில், சகோ. எமர்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 

ஏப்ரல் 9 'துர்க்காவதி மற்றும் ராம்நகர் பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் முகாம்களில், பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் வாயிலாக வேதவசனங்களை அவர்களது இதயத்தில் விதைக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். முகாமில் கலந்துகொண்ட சிறுவர் சிறுமியர் சிற்றுண்டியுடன் பரிசுகளும் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்பட்டனர். பணித்தளங்களில் சிறுவர் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், சிறுவயதிலேயே அவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 10 'சக்கியா பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் வட்டாரக் கன்வென்ஷன் கூட்டங்களுக்காகவும், துர்க்காவதி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெறும் சகோதரர்களுக்காகவும் மற்றும் மேற்கு மண்டலத்தில் செயல்பட்டுவரும் சிறுவர் இல்லங்கள் மற்றும் பிற திட்டங்களுக்காகவும் ஜெபிப்போம்.